
மும்பை,
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த 2021-ம் ஆண்டில் மராட்டிய மாநிலம் லாத்தூர் உட்கிர் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் டாக்டர் சசிகாந்த் தேஷ்பாண்டே. இவர் ஜூனியர் டாக்டருடன் போனில் பேசிய ஆடியோ சமீபத்தில் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.
அந்த ஆடியோவில், ஆஸ்பத்திரியில் படுக்கை நிரம்பி விட்டதால், சிகிச்சையில் இருக்கும் ஒரு கொரோனா நோயாளியை கொன்று விடுமாறு ஜூனியர் டாக்டரிடம் சசிகாந்த் தேஷ்பாண்டே கூறுகிறார். டாக்டர் ஒருவரே சிகிச்சையில் இருக்கும் நோயாளியை கொலை செய்யுமாறு கூறியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் ஆடியோ பரவியதை அடுத்து சம்பந்தப்பட்ட கொரோனா நோயாளியான கவுசர் பாத்திமா என்ற பெண்ணின் கணவர் தயாமி (வயது53) போலீசில் புகார் அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
"2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது எனது மனைவி கவுசர் பாத்திமா(41) நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரை சிகிச்சைக்காக உட்கிர் அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதித்தேன். கொரோனா சிகிச்சை மையத்தில் டாங்கே என்ற ஜூனியர் டாக்டர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டு இருந்தார்.
சம்பவத்தன்று டாக்டர் டாங்கே மதிய உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தார். அவர் அருகில் நான் இருந்தேன். அப்போது மூத்த டாக்டரான சசிகாந்த் தேஷ்பாண்டே, டாக்டர் டாங்கேவுக்கு போன் செய்தார். சாப்பிட்டு கொண்டு இருந்ததால் டாங்கே ஸ்பீக்கரில் போட்டபடி போனில் பேசினார். அப்போது சசிகாந்த் தேஷ்பாண்டே ஆஸ்பத்திரியில் காலியாக உள்ள படுக்கை குறித்த விவரங்களை கேட்டார்.
அதற்கு டாங்கே படுக்கை அனைத்தும் நிரம்பிவிட்டதாக கூறினார். இதையடுத்து சசிகாந்த் தேஷ்பாண்டே, ஜூனியர் டாக்டரிடம் கொரோனா நோயாளி பாத்திமா கவுசரை கொன்று விடுமாறு கூறினார். இதேபோல சமூக ரீதியிலும் அவர் நோயாளிகளை அவதூறாக பேசினார்.
இதைக்கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். எனினும் மனைவி சிகிச்சையில் இருப்பதால் நான் அமைதியாக இருந்தேன். மேலும் அடுத்த ஒரு வாரத்தில் எனது மனைவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் அந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டேன்." இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்.
இந்த புகாரை அடுத்து போலீசார் டாக்டர் சசிகாந்த் தேஷ்பாண்டே மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் அவரின் செல்போனையும் பறிமுதல் செய்து, அவரிடம் வாக்குமூலம் பெற்று உள்ளனர்.
இதேபோல மற்றொரு டாக்டர் டாங்கேவுக்கும் போலீசார் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பி உள்ளனர். இதேபோல சமூகவலைதளத்தில் பரவிய ஆடியோவின் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளிகளை கொல்ல உத்தரவிட்ட டாக்டர், ஆடியோ மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.