
மும்பை,
நவிமும்பையை சேர்ந்த பெண் டாக்டரை கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கும்பல் டிஜிட்டல் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 85 லட்சத்தை மோசடி செய்தது. டிஜிட்டல் கைது என்பது ேமாசடி கும்பல் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை போல பேசி பொதுமக்களை வீட்டில் சிறை பிடித்து பணம் பறிப்பதாகும்.
இதுபோன்ற டிஜிட்டல் கைது மோசடிகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. இந்தநிலையில் நவிமும்பை டாக்டர் அளித்த புகாரின் போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் டாக்டரிடம் அதிகாரிகள் போல பேசி அவரை டிஜிட்டல் கைது செய்து பணம் பறித்தது, மும்பை அந்தேரியை சேர்ந்த ரமேஷ் பாபுலால்(வயது45), கல்பாதேவியை சேர்ந்த அமிஷ் தீபக் ஷா(42) மற்றும் ஆமதாபாத்தை சேர்ந்த ராஜ்குமார்(55) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம், லேப்-டாப், 18 செல்போன்கள், 32 ஏ.டி.எம். கார்டு, 27 சிம் கார்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதில் அமித் தீபக் ஷா, ரமேஷ் பாபுலால் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராஜ்குமாரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், இந்த கும்பல் கடையை வாடகைக்கு எடுத்து அதை அரசு அலுவலகங்கள் போல மாற்றி உள்ளனர். மேலும் அங்கு இருந்து பொதுமக்களிடம் அதிகாரிகள் போல வீடியோ காலில் பேசி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.