
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த விழுதுபட்டு கிராமத்தை சேர்ந்த வேலு மகள் திவ்யா (வயது 19). இவருக்கும், வந்தவாசியை அடுத்த தழுதாழை கிராமத்தை சேர்ந்த செல்லப்பன் மகன் பிரதாப் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திவ்யா 4 மாதம் கர்ப்பமாக இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக திவ்யா அவருடைய தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று திவ்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் கணவர் பிரதாப் மனமுடைந்து விஷம் குடித்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரதாப் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வந்தவாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணி மனைவி தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அவரது கணவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.