ஓட்டேரியில் இருந்து கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

1 week ago 3


அம்பத்தூர்: ஓட்டேரியில் இருந்து கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, வாலிபர் கைது செய்யப்பட்டார். அம்பத்தூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நேற்று முன்தினம் அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கள்ளிக்குப்பம் சோதனைச்சாவடி சர்வீஸ் சாலை அருகே அம்பத்தூர் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் சீதாலட்சுமி, ஜெயந்தி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு பையுடன் வந்த ஒருவரை மடக்கி பிடித்து, சோதனை செய்தனர். அதில் சுமார் 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், கஞ்சா கடத்தி வந்தது, அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு பகுதியை சேர்ந்த கிஷோர் (21) என்பதும், கஞ்சாவை ஓட்டேரியில் இருந்து வாங்கி வந்து அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், பட்டரவாக்கம், கள்ளிக்குப்பம் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் சீதாலட்சுமி கிஷோரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தார்.

The post ஓட்டேரியில் இருந்து கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article