![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38800301-manavi.gif)
திண்டுக்கல்,
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர், தூத்துக்குடியில் உள்ள தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் தங்கியிருந்து படித்து வருகிறார். இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து ஓகா எக்ஸ்பிரஸ் ரெயிலில், என்ஜினுக்கு அருகில் உள்ள முன்பதிவில்லாத பெட்டியில் அந்த மாணவி ஏறி ஈரோட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.
ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்தை அடைந்ததும் வாலிபர் ஒருவர், மாணவி பயணம் செய்த பெட்டியில் ஏறினார். அம்பாத்துரை அருகே ரெயில் வந்த போது, அந்த வாலிபர் மாணவியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதைப்பார்த்த சக பயணிகள், ரெயில் நிலைய அவசரகட்டுப்பாட்டு எண் 139-ல் தொடர்புகொண்டு இதுகுறித்து புகார் கொடுத்தனர்.
இதையடுத்து ரெயில் திண்டுக்கல் வந்தபோது மாணவி பயணம் செய்த முன்பதிவில்லாத பெட்டிக்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், அந்த வாலிபர் விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் (33) என்பதும், கோவையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. கோவைக்கு செல்வதற்காக ஓகா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த போது, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடும் ரெயிலில் பெண்கள் பெட்டியில் பயணித்த, கர்ப்பிணி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அனைத்து ரெயில்களிலும் பெண்கள் பெட்டியில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தும்படி உத்தரவிடப்பட்டிருந்தநிலையில், மாணவிக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.