ஒரே கிணற்றில் விழுந்த புலி, காட்டுப்பன்றி...போராடி மீட்ட வனத்துறையினர் - வீடியோ வைரல்

3 hours ago 1

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் சியோனில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்த புலியும் காட்டுப் பன்றியும் மேலே வரமுடியாமல் ஒன்றாக நீந்தி போராடிக்கொண்டிருப்பது குறித்து தகவல் அறிந்த பென்ச் புலிகள் சரணாலய மீட்புக் குழுவினர் கிணற்றிலிருந்து புலியையும் காட்டுப்பன்றியையும் போராடி மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி் வருகிறது.

காடுகளைப் பாதுகாப்பது மட்டுமல்ல வனவிலங்குகளைப் பாதுகாக்கும் பணியிலும் வனத்துறையினர் பணி சிறப்பு மிக்கது. வனவிலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடுபவர்களிடம் இருந்து பாதுகாப்பதோடு, வேறு ஏதேனும் ஆபத்துகளில் சிக்கிக்கொண்டாலும் வனத்துறையினர்தான் வனவிலங்குகளை பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டு விடுகின்றனர்.

வனவிலங்குகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஐ.எப்.எஸ் அதிகாரிகள் பலரும் காடுகளில் பதிவாகும் வனவிலங்குகளின் வீடியோக்களையும் வனத்துறையினரின் பணிகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், ஐ.எப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான், கிணற்றில் விழுந்த புலியையும் காட்டுப் பன்றியையும் வனத்துறையினர் போராடி மீட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை முதலில், மத்தியப் பிரதேச மாநிலம், சியோனியில் உள்ள பென்ச் புலிகள் சரணாலயம் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ குறித்து பென்ச் புலிகள் சரணலாய எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

பிபாரியா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் ஒரு புலியும் ஒரு பன்றியும் தற்செயலாக விழுந்தன. பென்ச் புலிகள் சரணாலய மீட்புக் குழுவின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி, புலி மற்றும் பன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டன. நிபுணர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் கவனிப்புடன், இரண்டு விலங்குகளும் காயமின்றி வெளியே இழுக்கப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில், கிணற்றில் தவறி விழுந்த ஒரு புலியும், ஒரு காட்டுப் பன்றியும் மேலே வர முடியாமல் கிணற்றில் சண்டையிடாமல் அமைதியாக நீந்திக் கொண்டிருக்கின்றன. மீட்புக் குழுவினர் ஒரு கட்டிலையும், ஒரு கூண்டையும் கிரேன் மூலம் கிணற்றுக்குள் கயிறு கட்டி மீட்க முயற்சி செய்கின்றனர். இதில் புலி கூண்டுக்குள் சென்றதும் அதன் கதவை மூடி கிரேன் மூலம் மேலே தூக்குகின்றனர். அதே போல, காட்டுப் பன்றியையும் கட்டிலில் கட்டி மேலே தூக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

A tiger and a boar ccidentally fell into a well in Pipariya village near the reaserve. Thanks to the swift action of the Pench Tiger Reserve rescue team, big cat and boar were safely rescued! With expert coordination & care, both animals were pulled out unharmed and released back pic.twitter.com/s8lRZH8mN5

— Pench Tiger Reserve (@PenchMP) February 4, 2025

Read Entire Article