பாமக சார்பில் இன்று சித்திரை முழு நிலவு மாநாடு

5 hours ago 1

சென்னை,

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இருந்து பாமக தொண்டர்கள் மாநாட்டில் திரளாக பங்கேற்க இருக்கின்றனர். இதற்காக 1 லட்சத்து 80 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தலைவர்கள் அமரும் மேடைக்கு எதிரே அனைத்து பகுதிகளிலும் நிகழ்ச்சியை காண 3 இடங்களில் ராட்சத எல்.இ.டி. திரை வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல, 40-க்கு 20 உயரத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 ஆம்புலன்சுகளும், மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு திடலில் வன்னியர் சங்கம் உருவானது முதல் தற்போது வரையிலான வரலாற்று தொகுப்பு புகைப்பட காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதேபோல, மாநாட்டு திடலுக்கு வருபவர்களின் வசதிக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர், கழிப்பிட வசதிகள் செயப்பட்டு உள்ளது.

மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் முழு கட்டுப்பாடுடன், போலீசாரின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றி அமைதியான முறையில் வாகனத்தில் வர வேண்டும். அதேபோல், மாநாட்டை நிறைவு செய்து மீண்டும் அமைதியான முறையில் ஊர் திரும்ப வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. புஷ்பவனம் குப்புசாமியின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலைநிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, வன்னிய வள்ளல்கள் தியாகிகள் என்ற குறும்படமும் ஒளிபரப்பப்படும். பின்னர், மாலை 6.10 மணியளவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாநாட்டு திடலுக்கு வருகிறார்.

அப்போது, மேடையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்படும். அதைத்தொடர்ந்து, வன்னியர் சங்க கொடியை டாக்டர் ராமதாஸ் ஏற்றி வைக்கிறார். பின்னர், டாக்டர் ராமதாஸ் குறித்த வரலாற்று குறும்படமும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

மாநாட்டில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், மதுவிலக்கு உள்ளிட்டவைகள் குறித்து வலியுறுத்தப்பட இருக்கிறது. பின்னர், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மாநாட்டின் நிறைவாக டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் உரை நிகழ்த்துவார்கள். அப்போது, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் கூட்டணி குறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article