தருமபுரி / மேட்டூர்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 3,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்வதாலும், கபினி அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாலும் வரும் நாட்களில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 2,913 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3,017 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் 112.38 அடியிலிருந்து 112.48 அடியாகவும், நீர் இருப்பு 81.83 டிஎம்சியில் இருந்து 81.98 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது.