அரும்பாக்கம் சாலையில் திடீர் பள்ளம்: போலீஸ் கமிஷனர் அருண் ஆய்வு

1 day ago 5

அண்ணாநகர், ஜூன் 4: பூந்தமல்லி நெடுஞ்சாலை அரும்பாக்கம் பிரதான சாலையில் நேற்று காலை திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவ்வழியாக வந்த அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த அண்ணாநகர் மண்டல மாநகராட்சி செயற் பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் வைத்தியலிங்கம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டது தெரியவந்தது. முழுமையான ஆய்வுக்கு பிறகுதான் எப்படி பள்ளம் ஏற்பட்டது என்று தெரியவரும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, அந்த பகுதியில் தடுப்புகள் அமைத்து, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் மண் கொட்டி, உடனடியாக சீரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, அந்த வழியாக காரில் சென்று ெகாண்டிருந்த சென்னை காவல் ஆணையர் அருண் உடனடியாக காரைவிட்டு இறங்கி வந்து பார்வையிட்டு, சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடித்து மக்கள் சிரமமின்றி செல்ல ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

The post அரும்பாக்கம் சாலையில் திடீர் பள்ளம்: போலீஸ் கமிஷனர் அருண் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article