சென்னை, ஜூன் 4: சென்னையில் கடந்த மே மாத்தில் போதை பொருள் விற்பனை செய்ததாக தனித்தனியாக 110 வழக்குகள் பதிவு செய்து நைஜீரியர்கள் உள்பட 228 பேரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில், போலீஸ் கமிஷனர் அருண், நுண்ணறிவு பிரிவு இணை கமிஷனர் தர்மராஜன் நேரடி கண்காணிப்பில் கடந்த 5.8.2024ம் தேதி போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தொடங்கப்பட்டது. நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் சக்திவேல் மேற்பார்வையில் இயங்கும் இந்த பிரிவில் ஒரு உதவி கமிஷனர், 2 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள், 30 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த வகையில் கடந்த மே மாதம் சென்னை பெருநகர காவல் எல்லையில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக தனித்தனியாக 110 வழக்குகள் பதிவு செய்து, 28 வெளிமாநில நபர்கள் உள்பட மொத்தம் 228 பேர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக கஞ்சா விற்பனை மற்றும் கடத்தியதாக 91 கஞ்சா வழக்குகளில் 170 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 285 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், போதை மாத்திரைகள் விற்பனை செய்தாக 7 வழக்குகள் பதிவு செய்து 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1,554 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதோடு இல்லாமல் மெத்தபெட்டமின், ஹெராயின் உள்ளிட்ட செயற்கை போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கூண்டேடு கைது செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மே மாத்தில் 12 வழக்குகள் பதிவு செய்து நைஜீரியர்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 133 கிராம் மெத்தபெட்டமின், 1 கிலோ 541 கிராம் மதிப்புள்ள மெத்தகு லோன், 46.56 கிராம் ஹெராயின், 49 கிராம் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தாக மே மாதத்தில் 16 பேர், கமிஷனர் அருண் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post கடந்த மே மாதத்தில் மட்டும் சென்னையில் போதை பொருள் விற்ற நைஜீரியர்கள் உள்பட 228 பேர் கைது: 46 கிராம் ஹெராயின் 49 கிராம் கொக்கைன் 133 கிராம் மெத்தபெட்டமின் பறிமுதல்; போலீசார் அதிரடி appeared first on Dinakaran.