
சென்னை,
கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில், 5 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால், கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது. மொத்த படப்பிடிப்பும் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
விஜய் சேதுபதி நடித்து முடித்த அவரது 51-வது படமான 'ஏஸ்' ரிலீசுக்கு தயாராக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் அனைத்து காட்சிகளிலும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். ருக்மிணி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.
சமீபத்தில் 'ஏஸ்' படத்தின் 'உருகுது உருகுது' எனத்தொடங்கும் முதல் பாடல் வெளியானது. ஜஸ்டின் பிராபகரன் இசையமைப்பில் கவிஞர் தாமரை எழுதிய இப்பாடலை கபில் கபிலன், ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். விஜய்சேதுபதி, யோகி பாபு நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. 'ஏஸ்' படம் மே 23ம் தேதி வெளியாக உள்ளது.
இன்று படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைப்பெற்றது. அதில் விஜய் சேதுபதி பேசியதாவது " எனக்கு இயக்குநர் ஆறுமுககுமாரை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்திற்கு முன்பாகவே தெரியும். ஒரு ஆடிஷனின் போது என்னை நல்லா நடிப்பான் என நம்பிக்கை வைத்து பரிந்துரை செய்தது ஆறுமுககுமார்தான். 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்துல இவன் நல்லா நடிப்பான்னு சொன்னது ஆறு தான். அதற்காக நன்றி தெரிவிக்கிறேன். இருளில் விளக்கு ஏத்தி வச்சது ஆறுதான். பழச எப்போது நினைவு வச்சுகிறது என்னை உயிரோடவும் ஈரத்துடன் வச்சுக்க உதவுகிறது" என மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.