
டெல்லி,
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த ராணுவ நடவடிக்கையின்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது.
3 நாட்கள் நடந்த இந்த சண்டையில் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசியும் தாக்கியது. இதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
அதேவேளை, கடந்த 10ம் தேதி இருநாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இதனை தொடர்ந்து இரு நாடுகளின் டி.ஜி.எம்.ஓ. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டது. இதையடுத்து, எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. எல்லையில் உள்ள படைகளின் அளவை குறைக்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.