சென்னை: வாணியம்பாடியை சேர்ந்த தொழிலதிபர் ஜூனைத் அகமது தனது ஊழியரான சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து தனது நிறுவனத்திற்கு சி.டி.ஸ்கேன் வாங்க அனுப்பி உள்ளார்.பணத்துடன் வந்த முகமது கவுசை சீருடையில் இருந்த திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங் வழிமறித்துள்ளார். இது ஹவாலா பணம் எனக்கூறி வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோர் உதவியுடன் முகமது கவுசை காரில் கடத்தி மிரட்டி 20 லட்சம் ரூபாயில் ஐந்து லட்சம் ரூபாயை திரும்ப அளித்து பதினைந்து லட்சத்தை பறித்து சென்றனர். இதுதொடர்பாக முகமது கவுஸ் அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை அமர்வு முதன்மை நீதிமன்றத்தில் 4 பேரும் மனுத்தாக்கல் செய்தனர். மனு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, தங்களுக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவறான நோக்கத்துடன் செயல்படவில்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென மனுதாரர்கள் சார்பில் கோரப்பட்டது. காவல்துறை சார்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், இந்த விவகாரத்தில் வேறொரு சிறப்பு உதவி ஆய்வாளரும் சம்பந்தப்பட்டுள்ளார். அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. கையும் களவுமாக பிடிப்பட்ட 4 பேரும் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாமீன் வழங்கினால் தலைமறைவாக வாய்ப்புள்ளது என்றார். காவல்துறை வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு நால்வரும் தங்களது பதவியை தவறாக பயன்படுத்தி உள்ளதாக கூறி அவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post ஊழியரை கடத்தி ரூ.20 லட்சம் பறிப்பு எஸ்எஸ்ஐ உள்ளிட்ட 4 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.