ஈரோடு: நான்கு ஆண்டுகளில், 3வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் இன்று நடக்கும் நிலையில், கடந்த இடைத்தேர்தலைப் போல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வருவார்களா என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்ற திருமகன் ஈவெரா மறைவை அடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடந்தது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற இந்த இடைத்தேர்தலில், 74.79 சதவீத வாக்குகள் பதிவாகின. இத்தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.