
புதுடெல்லி,
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் நேற்று பரிந்துரைத்த நிலையில், இன்று ட்ரம்புக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கூறியிருப்பதாவது: "ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் அனைத்து சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது. இந்தத் தாக்குதலில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள ஈரானுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது. ஈரான்-இஸ்ரேல் இடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மோதல் நீடித்து வரும் நிலையில், ஈரானில் உள்ள போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
முன்னதாக, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தும் முயற்சியில் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறி, அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் அரசு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அதற்கு மறுநாளே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.