இழந்ததை மீட்டுத் தரும் கார்த்தவீர்யார்ஜுனர்

11 hours ago 1

கிருதயுகத்தில் சத்ரிய வம்சத்தில் ஹேஹய நாட்டில் மகிஷ மதியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கிருதவீரன் - பத்மினிக்கு பிறந்தவர் கார்த்த வீர்யார்ஜுனர். இவர் மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தின் அம்சம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. தத்தாத்ரேயரை குருவாக ஏற்று வேத மந்திரங்கள் கற்று பணிவிடை செய்து, நினைத்தபோது ஆயிரம் கரங்களைப் பெறும் வல்லமை பெற்றவர்.

மேலும் மகாவிஷ்ணுவைத் தவிர வேறு எவராலும் மரணம் ஏற்படாத வரத்தையும் பெற்றவர். இவர் 85 ஆயிரம் ஆண்டுகள், மூன்று உலகங்களையும் ஆண்டதாக புராணங்கள் சொல்கின்றன.

ராமாயணத்தில் ராவணனை பற்றி குறிப்பிடும்பொழுது, கார்த்த வீர்யார்ஜுனர் ராவணனோடு போரிட்டு வெற்றி பெற்றதாக ஒரு குறிப்பு உள்ளது. ஐயப்பனின் 18 படிகளில் 7-ம் படியாக கார்த்த வீர்யார்ஜுனர் இருப்பதாகவும், குருவின் சொல் கேட்டு சாஸ்தா வழிபாடு செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

காமதேனுவை பொது சொத்தாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஜமதக்னி முனிவரைக் கொன்று காமதேனுவை கவர்ந்து சென்றார், கார்த்த வீர்யார்ஜுனர். இதனால் ஜமதக்னி முனிவரின் மகனும் விஷ்ணுவின் அவதாரமுமான பரசுராமருடன் போரிட நேர்ந்தது. இதில் பரசுராமரால் கொல்லப்பட்டு முக்தி அடைந்தார். எனினும், தன் நாட்டு மக்களின் வளமான வாழ்வுக்காக போரிட்டதால், அவரை காக்கும் கடவுளாக திகழ மகாவிஷ்ணு அருள்பாலித்தார்.

கார்த்த வீர்யார்ஜுனருக்கு மூலக் கோவில் உஜ்ஜைனியில் மகேஸ்வரர் என்ற இடத்தின் அருகே அகல்யாபாய் கோட்டையில் உள்ளது. தமிழகத்தில் கும்பகோணம் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள சேங்காலிபுரம் ஆலயத்திலும் இவருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நான்கு அடி உயரத்தில் நின்ற கோலத்தில், பச்சைக் கல்லில் கார்த்த வீர்யார்ஜுனர் திருமேனி அமைக்கப்பட்டுள்ளது.

இழந்ததை மீட்டுக் கொடுக்கும் இறைவனாக, 16 செல்வங்களை வழங்கும் விதத்தில் காப்பதற்குரிய 16 ஆயுதங்களோடும், சுதர்சன சக்கரத்துடன் காட்சி தருகிறார். காலில் பாதரக்சை, பார்த்தசாரதிப் பெருமாள் போல் மீசை, கதை, சங்கு, சக்கரதாரியாக யந்திரங்களுடன் கார்த்த வீர்யார்ஜுனர் அருள்பாலிக்கிறார்.

செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் நம்பிக்கையுடன் பூஜை, ஹோமம் செய்து, கார்த்த வீர்யார்ஜுனரை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும். இழந்த சொத்து, தொலைந்த பொருள், பிரிந்து சென்ற உறவுகள், நலிந்த உடல் ஆரோக்கியம், அடகு வைத்த நிலம், நகை அனைத்தும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

Read Entire Article