வைகை அணையில் இன்று முதல் கூடுதல் தண்ணீர் திறப்பு

7 hours ago 1

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வைகை அணையில் ஓரளவு தண்ணீர் இருந்தது.

தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் முன்கூட்டியே தொடங்கியது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்தது. தற்போது அணையின் 64 அடியாக உள்ளது. இதற்கிடையே வைகை அணையில் இருந்து ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வைகை அணையின் பூர்வீக பாசன பகுதியாக உள்ள ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வைகை அணையில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளதால் ராமநாதபுரம் பூர்வீக பாசன பகுதிகளுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி வரை 7 நாட்களில், மொத்தம் 1,251 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதாவது அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் வைகை ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஏற்கனவே வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட கலெக்டர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் முன்எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என்று முன்எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Entire Article