
சென்னை,
திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரெயில் 4 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 5.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரெயில் (வண்டி எண் 66063), புதுச்சேரியில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் புதுச்சேரி- விழுப்புரம் பயணிகள் ரெயில் (வண்டி எண் 66064) ஆகிய 2 ரெயில்களும் நாளையும், நாளை மறுநாளும் (வியாழன், வெள்ளி) மற்றும் 28, 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் எழும்பூர்-புதுச்சேரி பயணிகள் ரெயில் (வண்டி எண் 66051), வருகிற 29-ந் தேதி மட்டும் வசதிக்குரிய ரெயில் நிலையத்தில் சுமார் 60 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.