மீனம்பாக்கம்: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் நேற்றிரவு சென்னை விமான நிலையம் வந்தனர். அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 11 மீனவர்கள், கடந்த ஜனவரி 10ம் தேதி இரவு 2 விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். மறுநாள் அதிகாலை இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு இலங்கை கடலோர காவல்படையின் ரோந்து கப்பல் சுற்றி வளைத்தது. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி கைது செய்தனர். அவர்களின் 2 விசைப் படகுகள் மற்றும் மீன்களையும் பறிமுதல் செய்தனர். 11 பேரையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதங்கள் எழுதி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேரை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, கடந்த 14ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. இவர்கள் கொழும்பில் இருந்து நேற்றிரவு சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
The post இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் சென்னை வந்தனர் appeared first on Dinakaran.