ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை கைது செய்து, 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் மீனவர்கள் ஈடுபட உள்ளனர்.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 470க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் அனுமதி டோக்கன் பெற்று 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர்.
இதில் 5 விசைப்படகுகளை விரட்டிப் பிடித்து, அதில் இருந்த 32 மீனவர்களையும் கைது செய்தனர். 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை பார்த்த மற்ற மீனவர்கள் மீன்பிடி வலைகளை வெட்டி விட்டு தப்பி கரை திரும்பினர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் படகுகளையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தினர். பின்னர் மேல் நடவடிக்கைக்காக மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இலங்கை கடற்படையின் சிறைபிடிப்பு சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையின் சிறைபிடிப்பு நடவடிக்கையை கண்டித்தும், கைதான மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் மீனவ சங்க பிரதிநிதி சகாயம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று (பிப். 24) முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென தீர்மானிக்கப்பட்டது. அடுத்த சில தினங்களில் மாநிலம் தழுவிய மீனவர்கள் போராட்டம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என மீனவ சங்கங்கள் தெரிவித்தன.
* 2 மாதத்தில் 131 மீனவர்கள் கைது
இந்திய – இலங்கை கடல் எல்லையில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இம்மாதத்தில் நேற்று வரை 66 மீனவர்களை கைது செய்து 11 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இந்தாண்டு துவங்கி இரண்டு மாதத்தில் 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 18 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் செயல் என மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
The post இலங்கை கடற்படை அட்டூழியம் உச்சகட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது appeared first on Dinakaran.