
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
இதற்காக பாரதிய ஜனதா கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள எடப்பாடி பழனிசாமி மேலும் பல கட்சிகளையும் கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதே நேரத்தில் கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ள எடப்பாடி பழனிசாமி இன்று (4-ந்தேதி) எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். தங்களது தொகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி எம்.எல்.ஏ.க்கள் செயல்பட வேண்டும் என்று இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்துகிறார். மேல்சபை எம்.பி. தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் விளக்கி கூறுகிறார்கள்.