
பீஜிங்,
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
அதேவேளை, இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இன்று மாலை 5 மணியளவில் அறிவித்தார். இதையடுத்து, பாகிஸ்தானுடனான போர் இன்று மாலை 5 மணி முதல் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும், போர் நிறுத்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் போர் பதற்றத்திற்கு தீர்வு காண வேண்டுமென சீனா வலியுறுத்தி உள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை இன்று சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பஹல்காம் தாக்குதலுக்கு சீனா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, பதற்றத்தை தணிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.