டெல்லி: இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் 28,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புத்தாக்க நிறுவனங்கள் எனப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்பவை புதிய தயாரிப்பு அல்லது சேவையுடன் வணிகத்தை ஆரம்பிக்கும் நிறுவனங்கள் ஆகும். இவற்றை தொடங்குவோர் பெரும்பாலும் தொழில் முனைவோர்களாக இருக்கின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 28,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதாக தரவுகளை ஆய்வு செய்யும் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பின் ஆய்வின்படி 2023ம் ஆண்டு 15,921 நிறுவனங்களும், 2024ம் ஆண்டு 12,717 நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் மூடப்பட்டு இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நஷ்டத்தால் செயல்பட முடியாமல் முடங்கியதாக கூறப்படுகிறது.
கடந்த 2019 முதல் 2022 ஆண்டுகளில் 2,300 நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும், இது கடந்த ஆண்டுகளில் மூடப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையை விட 12 மடங்கு அதிகமாக உள்ளதாக தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக இவ்வாண்டில் தற்போது வரை 125 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், நடப்பாண்டில் ஏற்கனவே 259 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதாகவும் இது மேலும் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
The post இந்தியாவில் 2 ஆண்டுகளில் 28,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூடல்: வெளியான அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.