
புதுடெல்லி,
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.
இந்த சூழலில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் நடத்திய இந்த அதிரடி தாக்குதலுக்கு பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்திய முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஒற்றுமையில் அச்சமற்றவர். வலிமையில் எல்லையற்றவர். இந்தியாவின் கேடயம் அதன் மக்கள். இந்த உலகில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. நாங்கள் ஒரே அணி. ஜெய் ஹிந்த் என பதிவிட்டுள்ளார்.
முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்ட பதிவில், ஜெய் ஹிந்த்... ஆபரேஷன் சிந்தூர் என்பது பஹல்காமில் எங்கள் அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு இந்தியாவின் பதில் என பதிவிட்டுள்ளார்.
முன்னாள் வீரர் சேவாக் வெளியிட்ட பதிவில், ஜெய் ஹிந்த்.. ஆபரேஷன் சிந்தூர் என்ன ஒரு பொருத்தமான பெயர் என பதிவிட்டுள்ளார்.
முன்னாள் வீரர் தவான் வெளியிட்ட பதிவில், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுக்கிறது என பதிவிட்டுள்ளார்.
இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் வெளியிட்ட பதிவில், ஜெய் ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர் என பதிவிட்டுள்ளார்.