சென்னை: இந்தியா முழுவதும் பணியாற்றும் அனைத்து மாநில 4ம் பிரிவு ஊழியர்களுக்கு ஒரே சம்பளம் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் சம்மேளனத்தின் சார்பில் எட்டாவது ஊதிய குழு தொடர்பான கூட்டம் அகில இந்திய தலைவர் கே.கணேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.மதுரம், உத்திரபிரதேச மாநிலத்தின் நான்காம் பிரிவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் திருமாவளவன ராம்சந்திர குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கே.கணேசன் கூறியதாவது: ஏழாவது ஊதியக்குழு குளறுபடிகளை எல்லாம் கலைந்து அனைத்து மாநிலங்களிலும் ஒரே இந்தியா என்பதற்கு ஏற்ப இந்தியா முழுவதும் பணியாற்றுகின்ற ‘டி’ பிரிவு பணியாளர்ளுக்கு ஒரே சம்பளம், ஒரே கிரேட் பே, ஒரே எச்ஆர்ஏ, ஒரே சி.சி,ஏ, ஒரே மலைப்படி, ஒரே பொங்கல் அல்லது தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். இந்தியா முழுவதும் பணியாற்றுகின்ற அங்கன்வாடி சத்துணவு தோட்டக்கலைத்துறை பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள், தினக்கூலி, தொகுப்பு ஊதியம், மதிப்பூதியம், சிறப்பு காலம் வரை ஊதியத்தில் பணியாற்றுகின்ற அனைத்து பணியாளருடைய சம்பள விகிதங்களை எல்லாம் ஒவ்வொரு மாநிலங்களும் விரைவாக அனுப்பி வைக்க வேண்டும்.
ஊராட்சி நகராட்சி பேரூராட்சி மாநகராட்சி போன்ற மற்றும் பணியாற்றுகின்ற அனைத்து பணியாளர்களையும் அரசு பணியாளராக தரம் உயர்த்த வேண்டும். இதுகுறித்து அடுத்த விரிவான ஆலோசனை கூட்டம் காஷ்மீர் அல்லது ஜெய்பூரில் நடைபெறும். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பிரதமருக்கும், அனைத்து மாநில முதல்வருக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இவ்வாறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
The post இந்தியா முழுவதும் பணியாற்றும் அனைத்து மாநில 4ம் பிரிவு ஊழியர்களுக்கு ஒரே சம்பளம்: அரசு ஊழியர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.