ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் மீண்டும் ஒரு மொழிப்போராட்டம் நடத்த தயார்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

3 hours ago 1

சென்னை: ஒன்றிய பாஜ அரசின் கட்டாய மொழி திணிப்புக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவினர் அரசியல் ஆக்க வேண்டாம், எங்களுடன் ஒன்றிணைந்து ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வாருங்கள் என்று கூறினார்.போராட்டத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடே கொந்தளிப்பில் உள்ளது, ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. டிசம்பரில் சென்னை மற்றும் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு ஒரு பைசா நிதி கூட வழங்கவில்லை.

கல்விக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் உள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் கட்டிய வரிப்பணத்தை பெற்றுக் கொண்டு நிதி வழங்க மறுக்கிறது. தமிழ்நாடு மக்களை ஒருபோதும் மிரட்டி பணிய வைக்க முடியாது. தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்திய அரசியல் சட்டத்தை மதிக்கிறோம், ஜனநாயகத்தை மதிக்கிறோம். ஆனால் ஒன்றிய பாசிச பாஜ அரசைதான் எதிர்க்கிறோம். இன்னொரு மொழி போராட்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நம்முடைய பிள்ளைகளை காக்க போராட்டத்தில் ஈடுபடுவோம். இதை அதிமுகவினர் அரசியல் ஆக்க வேண்டாம்.

எங்களுடன் ஒன்றிணைந்து ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வாருங்கள். மும்மொழி கொள்கையை எதிர்ப்போம். 1938ல் இந்தி எதிர்ப்புக்காக பலி கொடுத்தோம், மீண்டும் 2025ம் ஆண்டு மொழிக்காக போராட்டம் நடத்த தயாராக உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதா? வேண்டாமா? என்பது பாஜ கையில்தான் உள்ளது. இன்று தமிழர்கள் பல்வேறு துறைகளில் வேலை பார்த்து வருகின்றனர். இஸ்ரோவுடைய தலைவரே தமிழர் தான். அவர்களில் பெரும்பாலானோர் அரசு பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையை கற்றவர்கள்தான். இந்தி திணிப்பை எதிர்த்து எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் மறந்துவிட்டு உங்களுடைய மிரட்டலுக்கு நாங்கள் அடிபணிவோம் என்று நினைத்தால் அது கனவில் கூட நடக்காது. தமிழைக் காக்க எங்கள் உயிரையும் விட தயாராக இருக்கிறோம் என்பதை நாங்கள் தெரியப்படுத்திக் கொள்கிறோம். எங்களின் பிள்ளைகளின் கல்வியோடு விளையாடாதீர்கள். போன முறை ‘கோ பேக் மோடி’ என்று சொல்லி துரத்திய தமிழர்கள், நிதி வழங்கவில்லை என்றால் ‘கெட் அவுட்’ மோடி என்று சொல்லித்தான் துரத்துவார்கள். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி, தயாநிதி மாறன் எம்பி, ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன், கூட்டணி கட்சித் தலைவர்களான திக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்ெசயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், தவாக தலைவர் வேல்முருகன்,

மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, கொமதேக தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒன்றிய அரசையும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சரையும் கண்டித்து கண்டன உரையாற்றினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

* அனைத்து மாநிலங்களையும் ஏமாற்றுகிறார்கள்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி: இது உங்கள் அப்பன் வீட்டு பணமா? 40 லட்சம் மாணவர்களின் வாழ்வில் விளையாடாதீர்கள். ஒன்றிய அமைச்சருக்கு ஒத்திசைப்பட்டியல் என்றால் என்ன என்றே தெரியவில்லை. அனைத்தையும் மூடி மறைக்கும் ரகசிய பட்டியலாக அதை வைத்துள்ளதால்தான் அனைத்து மாநிலங்களையும் ஏமாற்றுகிறார்கள். அதேபோல தமிழகத்தை ஏமாற்றப் பார்க்கிறார்கள். மற்ற மாநிலங்களை நீங்்கள் ஏமாற்றலாம். ஆனால் இங்குள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஏமாற்ற இன்னும் ஒருவர் பிறந்துதான் வரவேண்டும்.

* அடங்காத ஆணவம்

விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி: ஒன்றிய அரசு இன்னும் பிடிவாதத்தோடு நிதியை தர முடியாது என்று ஆணவத்தோடு சொல்லுகிற நிலையை பார்க்கிறோம். இந்த நிலையில் தான் தமிழக முதல்வர் ஆணைப்படி இந்த அடையாள ஆர்ப்பாட்டம் தொடங்கி இருக்கிறது. மீண்டும் ஒரு மொழிப்போர் அறப்போராட்டம் தொடங்க உள்ளது. இந்தியா முழுவதும் ஒரே மொழியை பேசுகிற ஒரு நிலையை உருவாக்க வேண்டும், ஒரே தேசம், ஒரே கட்சி இது தான் அவர்களின் இறுதி இலக்கு.

* நிதி தர முடியாது என சொல்ல நீ யார்?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தர்மேந்திரா பிரதானுக்கு தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகம், போராட்டம் தெரியாது. மொழிக்காக தீக்குளித்து மாண்டவர்கள் உலகிலேயே தமிழகர்கள் தான். நிதியை கொடுக்க முடியாது எனக்கூற நீ யார்? தமிழ்நாட்டை அச்சுறுத்த நினைத்தால் உங்கள் காலத்திலேயே இந்தியா துண்டுதுண்டாக சிதறுகிற நிலை ஏற்படும்.

* மன்னிப்பு கேள்..

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: 1965ம் ஆண்டு என்ன நடைபெற்றது என்று மோடிக்கும் தெரியாது, அந்த கட்சிக்கும் தெரியாது. இரு மொழிக் கொள்கை காலாவதியாகவில்லை, நீங்கள் தான் காலாவதி ஆகி விட்டீர்கள், ஒன்றிய கல்வி அமைச்சர் இதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

* தமிழகம் திரளும்

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: கல்வியில் முன்னேற்றம் அடைந்த மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் மற்றொரு மொழி திணிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கல்விக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க ஒன்றிய அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இந்த நிலையை நிறுத்தாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு செல்வோம். தமிழகமே ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக திரண்டு வரும்.

* இந்தியை திணிக்க நினைத்தால்…

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை: இந்த போராட்டம், அடுத்த தலைமுறையை பாதுகாக்கின்ற போராட்டம். இன்று இந்தியாவில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாவது மாநிலமாக இருக்கிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலத்துக்கு பிறகு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி வரியை ஒன்றிய அரசிற்கு தருகிறோம், எங்களுக்கு உரிய உரிமையை ஏன் தர மறுக்கிறீர்கள் என்று கேட்டால் இதுதான் ஜனநாயகம் என்று பாஜ சொல்லுகிறது. இது தமிழ்நாடு. பின்புற வழியாக இந்தியை திணிக்க நினைத்தால் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். பாஜ ஒருபோதும் தமிழ்நாட்டில் கால் ஊன்றாது.

* ஒத்துழைக்க மறுப்போம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்: முதல்வருக்கு அன்பான வேண்டுகோள் தமிழ்நாட்டில் இயங்குகின்ற ஒன்றிய அரசு அலுவலகத்தில் நாங்கள் ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று கூறுங்கள், சுங்க கட்டணங்கள் தர மறுப்போம், ஜிஎஸ்டி கொடுக்க ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று அனைவரும் கூறுங்கள். இவற்றை முதல்வர் செய்தால் மோடி உங்கள் வழிக்கு வருவார். தமிழ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடி அரசை நாடாளுமன்றத்தில் கிழித்து தொங்க விடுகிறார்கள், நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

The post ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் மீண்டும் ஒரு மொழிப்போராட்டம் நடத்த தயார்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article