
ரோம்,
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், வடக்கு ஆப்பிரிக்காவை அமைந்துள்ள துனிசியாவில் இருந்து 60 க்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பிய நாடான இத்தாலிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்தனர். இதற்காக படகு மூலம் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் பயணித்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த இத்தாலி கடலோர காவல்படையினர் விரைந்து சென்று கடலில் தத்தளித்த 4 பெண்கள் உள்பட 10 பேரை உயிருடன் மீட்டு லம்பெடுசு தீவுக்கு அழைத்து சென்றனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் தண்ணீரில் மூழ்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோ மாயமாகினர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.