சென்னை : ஆர்.என்.ரவி ஒரு நிமிடம் கூட ஆளுநராக நீடிப்பதற்கான தகுதியை முழுமையாக இழந்துவிட்டார் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கையில்,
“தமிழ்நாடு அரசு நிறைவேற்றி தரும் மசோதாக்களுக்கு அங்கீகாரம் தராத ஆர் என் ரவி தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டத்தால் உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு ஆளானார்.
தற்போது தமிழ்நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான மூன்று நாள் மாநாடு நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என ஆர் என் ரவி அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
சட்டத்தை மதிக்காத ஆளுநரின் இந்த செயல் ஏற்புடையது அல்ல. தொடர்ந்து இவர் தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்.
மக்கள் அதிகாரத்தையும் மீறி சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டு வருகிறார். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தையும் கடந்து டெல்லியில் எஜமானர்களுக்கு விசுவாசத்தை காட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்.
பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் நீக்கப்பட்டு மாநில முதலமைச்சர் நியமிக்க வழிவகை செய்யும் மசோதா உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதால் தற்போது பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக முதலமைச்சரே செயல்படுகிறார். இத்தகைய சூழ்நிலையில் எதிர்வரும் 25 26 27 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மூன்று நாள் மாநாடு நீலகிரி ஆளுநர் மாளிகையில் நடைபெறுவதாகவும் இந்த மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பார் என்ற அறிவித்திருப்பதும் கடும் கண்டத்துக்குரியது.
அரசமைப்புச் சட்டத்தையும் உச்சநீதிமன்றத்தையும் மதிக்காமல் செயல்படும் ஆர் என் ரவி ஒரு நிமிடம் கூட ஆளுநராக நீடிப்பதற்கான தகுதியை முழுமையாக இழந்து விட்டார்.
ஆளுநரின் அத்துமீறலை குடியரசுத் துணைத் தலைவரும் இணைந்து அங்கீகரித்திருப்பது இந்திய ஒருமை பாட்டிற்கு கேடு விளைவிப்பதாகும்.அந்த மாநாட்டில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்ய வேண்டும் எனக்கு கேட்டுக் கொள்கிறேன்,”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post ஆர்.என்.ரவி ஒரு நிமிடம் கூட ஆளுநராக நீடிப்பதற்கான தகுதியை முழுமையாக இழந்துவிட்டார் : ஜவாஹிருல்லா தாக்கு appeared first on Dinakaran.