சென்னை : ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் அதிவேக விசைப்படகுகளை குறிப்பிட்ட பகுதியில் இயக்க தடை விதிக்க தமிழ்நாடு அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில், கடற்கரையில் 350க்கும் மேற்பட்ட அரிய வகை கடல் ஆமைகள் இறக்க வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் குழு எச்சரிக்கை விடுத்திருந்தது. வல்லுநர்கள் குழு எச்சரிக்கை என வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. தென்மண்டல பசுமை தீர்ப்பாய உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு முன் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆமைகள் இனப்பெருக்க காலமான ஜனவரி முதல் ஏப்ரல் வரை விசைப்படகுகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என்றும் ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகுகளை குறிப்பிட்ட பகுதியில் இயக்க தடை விதித்த அரசாணையை அமல்படுத்தாதது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனிடையே அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “விசைப்படகுகளை தடை செய்யப்பட்ட பகுதியில் இயக்கிய 172 உரிமையாளர்களின் மானியம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது. 30 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தலையில் காயம், அதிர்ச்சி மற்றும் மூச்சு விட முடியாமல் ஆமைகள் இறந்ததாக பிரேத பரிசோதனையில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதல் ஆமைகள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரிசீலித்த நீதிபதிகள், தலைமைச் செயலாளர் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணை மார்ச் 18க்கு ஒத்திவைத்தனர்.
The post ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகுகளை குறிப்பிட்ட பகுதியில் இயக்க தடை விதிக்க வேண்டும் : தமிழக அரசுக்கு உத்தரவு!! appeared first on Dinakaran.