
சென்னை,
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.
இந்த சூழலில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் நடத்திய இந்த அதிரடி தாக்குதலுக்கு பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் திரைப்பிரபலங்களும் இந்த நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். அதன்படி, சிவகார்த்திகேயன், அல்லு அர்ஜுன், அக்சய் குமார், சுனில் ஷெட்டி, பரேஷ் ராவல், ரித்தேஷ் தேஷ்முக், அனுபம் கெர், பாடகர் அட்னான் சாமி, நடிகை நிம்ரத் கவுர், இயக்குனர் சேகர் கபூர், இயக்குனர் மதுர் பண்டார்கர், நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.