பொள்ளாச்சி : ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் மழையின்றி வறட்சி துவங்குவதால், விலங்குகள் இடம் பெயர்வதை தடுக்க வனத்தில் ஆங்காங்கே உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி துவங்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் டாப்சிலிப் வனப்பகுதிகளில் சிங்கவால் குரங்கு, யானை, சிறுத்தை, மான், காட்டு மாடு, கடமான் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் அதிகம் உள்ளன. இங்குள்ள டாப்சிலிப், கவியருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பயணிகள் தினமும் வந்து, இயற்கை அழகை ரசிப்பதுடன், ஆங்காங்கே உலா வரும் விலங்குகளை கண்டு செல்கின்றனர்.
அதிலும் டாப்சிலிப் செல்லும் வழியில் பல்வேறு வன விலங்குகள் நடமாடுவதை காண முடிகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அவ்வப்போது தென்மேற்கு பருவமழையும், அதன்பின் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவழையும், அடுத்தடுத்து பெய்ததால் வனப்பகுதியில் உள்ள மரம், செடிக்கொடிகள் செழித்தோங்கி பச்சை பசேலென காணப்பட்டது.
பலமாதமாக, பொள்ளாச்சி மற்றும் டாப்சிலிப் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதி செழிப்பால், சுற்றுலா பயணிகள் இயற்கை சூழலை கண்டு ரசித்து சென்றனர். அதன்பின், டிசம்பர் மாதத்திலிருந்து மழை மிகவும் குறைவானது. மேலும் அந்நேரத்திலிருந்து பனிப்பொழிவே அதிகமானது.
இந்நிலை கடந்த மாதம் 2வது வாரம் வரை இருந்தது. இதையடுத்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. பனி மற்றும் வெயிலின் தாக்கத்தால், வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடிக்கொடிகளில் இருந்து இலைகள் உதிர துவங்கியது. அதிலும், கடந்த சில வாரமாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானது.
இதில் டாப்சிலிப் வன பகுதியில் மட்டும் மாலை நேரங்களில் ஓரளவு குளிரின் தாக்கம் இருந்தாலும். மற்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம்தான் அதிகளவில் உள்ளது. மழையில்லாததால், பொள்ளாச்சி வனச்சரகம் சர்க்கார்பதி, தம்பம்பதி, போத்தமடை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீரோடைகள் தண்ணீர் மிகவும் குறைவானது.
எப்போதும் தொடர்ந்து தண்ணீர் அதிகளவு செல்லும் ஆழியார் அருகே உள்ள நவமலை நீரோடையில், தற்போது தண்ணீர் மிகவும் குறைந்து பெரும்பகுதி பாறைகள் வெளியே தெரிகிறது. வனப்பகுதியில் உள்ள சிற்றாறு மற்றும் நீரோடைகளில் தண்ணீர் வற்றியுள்ளதால், அடர்ந்த காட்டில் உலா வரும், யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குள் கடந்த சில வாரமாக, இறைத்தேடியும் தண்ணீரை தேடியும் இடம் பெயர்வது தொடர்ந்துள்ளது.
இதையடுத்து, அடர்ந்த காட்டு பகுதியிலிருந்து நீர்நிலைகளை தேடி வனவிலங்குகள் இடம்பெயர்வதை தடுக்க, வனத்துறை மூலம் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில், விலங்குகளுக்கு போதுமான தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி, டாப்சிலிப், மானாம்பள்ளி உள்ளிட்ட வனச்சரங்களில், வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் நிரப்ப ஏற்கனவே அமைக்கப்பட்ட பெரிய அளவிலான தொட்டிகளை சுத்தம் செய்து, நேற்று முதல் அதில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘பொள்ளாச்சி அருகே உள்ள வனப்பகுதிகளில், கடந்த 2 மாதமாக போதிய மழையில்லாததால், நீரோடைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், தண்ணீரை தேடி விலங்குகள் இடம்பெயர்வது தற்போது அதிகரித்துள்ளது.
இதையடுத்து, விலங்குகள் இடம்பெயர்ந்து சுற்றுலா பகுதிக்கு வருவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், வனத்தில் ஆங்காங்கே உள்ள தண்ணீர் தொட்டிகளில் லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் தண்ணீரை நிரப்பி, விலங்குகளின் தாகத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொட்டிகளில் தண்ணீர் குறையை குறைய அதில் மீண்டும் தண்ணீர் நிரப்பி சேகரித்து வைக்கப்படும். இதன் மூலம் வன விலங்குகள் இடம் பெயர்வது குறையும்’ என்றனர்.
தீத்தடுப்பு கோடுகள் அமைக்க நடவடிக்கை
கோடை காலம் தொடங்கியுள்ளதால் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள மரங்களில் இருக்கும் இலைகள் காய்ந்து உதிர துவங்கியது. வனப்பகுதிகளில் தீ அபாயம் ஏற்படாதவாறு இருக்க, வனத்துறையினர் தீ தடுப்பு கோடுகள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, பொள்ளாச்சி கோட்டத்தில் 4 வனச்சரகங்களையும் சேர்த்து மொத்தமுள்ள சுமார் 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிற்கு விரைவில் தீ தடுப்பு கோடு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
The post ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி விலங்குகள் இடம் பெயர்வதை தடுக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி appeared first on Dinakaran.