*தம்பதியாக நாடகமாடிய இருவர் கைது
சமயபுரம் : கணவன், மனைவி போல் நாடகமாடி ஆந்திராவில் இருந்து 22 கிலோ கஞ்சாவை திருச்சிக்கு கடத்தி வந்த இருவரை போதை பொருள் நுண்ணறிவு போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து 2 பேர் கஞ்சா வாங்கி வருவதாக திருச்சி மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சிஐடி போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சிஐடி போலீசார், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த காரை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் வந்த 2பேர், தாங்கள் கணவன்-மனைவி என்று கூறி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். தொடர்ந்து இருவரிடமும் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், கடம்பூரை சேர்ந்த சரவணன்(45), மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சேர்ந்த ரெங்கநாதன் மனைவி மஞ்சுளா (எ) மணிமேகலை (30) என்பதும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு சென்று அங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பூர்ணராவ் என்பவரிடம் 22 கிலோ கஞ்சாவை வாங்கி இருவரும் தம்பதி போல் நாடகமாடி கடத்தி வந்தது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சாவை கைப்பற்றி காரை பறிமுதல் செய்தனர்.
The post ஆந்திராவில் இருந்து திருச்சிக்கு கடத்திய 22 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.