அவர் இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாடாதது எனக்கு ஆச்சரியம் - ஆஸி.முன்னாள் கேப்டன்

2 hours ago 1

நாக்பூர்,

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 249 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சுப்மன் கில் 87 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் அடித்து வெற்றிக்கு உதவினர். சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இருப்பினும் இந்த போட்டிக்கான ஆடும் அணியில் (பிளேயிங் லெவன்) தான் முதலில் தேர்வு செய்யப்படவில்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். மேலும் விராட் கோலி காயமடைந்ததால்தான் தனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறினார். இது பல முன்னாள் வீரர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் 4-வது இடத்தில் விளையாடிய ஸ்ரேயாஸ் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தினார். அதன் வாயிலாக ஒரு உலகக்கோப்பையில் 4வது இடத்தில் களமிறங்கி 500-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார்.

இந்நிலையில் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடியும் சொந்த மண்ணில் கூட ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணி நிலையான வாய்ப்பு கொடுக்காதது ஆச்சரியமளிப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஸ்ரேயாஸ் கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாடாதது எனக்கு கொஞ்சம் ஆச்சரியம். இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் அவர் சிறப்பாக விளையாடினார். அதன் காரணமாக தனது சொந்த வழியில் இந்திய அணியில் அவர் நிலையான இடத்தைப் பிடித்து விட்டார் என்று நினைத்தேன். பின்னர் சில காயங்களை சந்தித்த அவர் அணியில் உள்ளேயும் வெளியேயுமாக இருந்தார்.

ஆனால் கடந்த வருடம் உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் மிகச்சிறப்பாக விளையாடினார். ஐ.பி.எல். ஏலத்தில் பஞ்சாப் அணியில் அவரை வாங்குவதற்கு முன் அவரது உள்ளூர் செயல்பாடுகளை நான் பார்த்தேன். அது அற்புதமாக இருக்கிறது. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மெதுவான ஆடுகளங்களில் அவர் உயர்ந்து நிற்கக்கூடியவர். குறிப்பாக இந்தியாவில் சுழலுக்கு எதிராக அவர் நன்றாக விளையாடக் கூடியவர்" என்று கூறினார்.

Read Entire Article