அறமற்ற துறையான தமிழ்நாடு அறநிலையத்துறை - சீமான் விமர்சனம்

1 month ago 9

சென்னை,

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை மக்கள் வழிபடத் திறக்காவிட்டால் நாம் தமிழர் கட்சி ஆலய நுழைவு போராட்டத்தை முன்னெடுக்கும் என்று நாங்கள் அறிவித்த பிறகு, இன்னும் ஒரு வாரத்தில் கோயில் திறக்கப்படும் என அறிவித்துள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள், கோயில் திறக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்துகொண்டு, நாம் தமிழர் கட்சி அரசியல் செய்வதாகப் போகிறபோக்கில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசு கோயிலைத் திறக்கவிருப்பது முன்கூட்டியே எங்களுக்குத் தெரியுமென்றால், நாம் தமிழர் கட்சி போராட்டத்தை அறிவிக்கும்வரை மேல்பாதி கோயில் விரைவில் திறக்கப்படும் என்பதை ஏன் அரசு அறிவிக்கவில்லை? கடந்த வாரம் சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை மக்கள் வழிபடத் திறக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு கூறியது ஏன்? இரண்டில் எது உண்மை? காலை 6 -7 மணி என்பது என்ன நேரம்? தீண்டாமை நேரமா? காலை ஒரு மணிநேரம் மட்டும் திறப்பது என்றால் அது வழிபாட்டுத் தலமா? அல்லது காலை உணவுக்கான உணவகமா? எல்லாம் முன்னமே தெரிந்து கொண்டு அறிவிக்கிறேன் என்றால் எங்கள் வீட்டு வாசலில் அழைப்பாணை ஒட்டுவது எங்களுக்கு முன்கூட்டியே தெரியாமல் போனது எப்படி? என்ற கேள்விக்கு மாண்புமிகு அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பதில் கூறுவாரா? இப்படிச் சிறிதும் அறமற்ற துறையாக தமிழ்நாடு அறநிலையத்துறை ஆனது ஏன்?

மேல்பாதி கோயிலைப் போன்றே தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பலநூறு கோயில்கள் திறக்கப்படாமலும், தேரோட்டம், திருவிழாக்கள் நடத்தப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே? உண்மையிலேயே திமுக அரசிற்கு அக்கறை இருந்திருந்தால் மக்கள் வழிபடுவதற்காக அவற்றையெல்லாம் திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இதிலிருந்தே கோயிலை வைத்து அரசியல் செய்வது திமுகவா? அல்லது நாம் தமிழர் கட்சியா? என்பதை மக்கள் தெளிவாக அறிந்துகொள்வார்கள்.

கோயில் நிலமெனக்கூறி ஏழை மக்கள் குடியிருக்கும் வீடுகளைப் பறிக்கும் அறநிலையத்துறை, பெரும் செல்வந்தர்கள் வசமுள்ள பல்லாயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை இதுவரை மீட்காதது ஏன்? கோயில் பணம் பல்லாயிரம் கோடிகள் கொள்ளைபோவதைத் தடுக்காது, கோ பூஜை நடத்துவதும், பள்ளிக்கூடம் நடத்தவே பணம் இல்லாதபோது பசு மடம் கட்டுவதும்தான் திராவிட மாடலா?

தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழ்நாடு அரசு தடை விதிப்பது ஏன்? தமிழில் குடமுழுக்குக்கோரி நாம் தமிழர் கட்சியினர் போராடினால் காவல்துறை மூலம் தடுத்து, தாக்குவது ஏன்? தமிழில் குடமுழுக்கு நடத்த போதிய அளவில் ஓதுவார்கள் இல்லையென்று தமிழ்நாடு அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தெரிவிப்பதற்கு வெட்கமாக இல்லையா? தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிப்புப் பலகை மட்டும் வைத்துவிட்டு பல நூறு கோயில்களில் அது நடைமுறையில் இல்லாமல் இருப்பது தான் உரிமையைப் பெற்றுக் கொடுத்த முறையா? இதுதான் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள தமிழ் வளர்ச்சியா?

தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் எத்தனை, ஒவ்வொரு கோயிலிலும் எந்தெந்த வழிகளில் வருமானம் வருகிறது, ஆண்டுதோறும் வரும் மொத்த வருமானம் எவ்வளவு, அவை எதற்கெல்லாம் செலவிடப்படுகிறது என்பது குறித்து, தமிழ்நாடு அரசு முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திய அதே பயபக்தியோடு மக்கள் மன்றத்தில் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமென கோரிக்கை வைக்கின்றேன்.

இல்லையென்றால், அத்தகவல்களைத் திரட்டி விரைவில் நாம் தமிழர் கட்சி பொதுவெளியில் வெளியிடும்போது, அறமற்ற அறநிலையத்துறையால் வழிபாட்டுத்தலங்கள் எல்லாம் எந்த அளவிற்கு வணிகத்தலங்களாக மாறி நிற்கிறது என்பதை மக்கள் அறிந்துகொள்வார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

"கோயில் கூடாது என்பதற்காக அல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாய் ஆகிவிடக்கூடாது என்பதற்காக.. இந்த உரையாடலை எங்கோ கேட்டதுபோல் உள்ளதா? உங்கள் 'பராசக்தி' படத்தின் வசனம்தான்.

கோயில்களை அறநிலையத்துறை நிர்வகிக்கக் கூடாதென்பதல்ல எங்கள் கொள்கை; கோயில்களைக் கொள்ளையடிக்கும் கூடாரமாக அறநிலையத்துறை ஆகிவிடக்கூடாது என்பதே எங்கள் கொள்கை . என தெரிவித்துள்ளார் . 

Read Entire Article