
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட பயணியருடன் நேற்று காலை சேலம் நோக்கி அரசு பஸ் புறப்பட்டது. வீரமலை ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றது பஸ்சின் இடதுபுற முன்பக்க சக்கரம் தானாக கழன்று ஓடி, ஓடையில் விழுந்தது.
முன்பக்க சக்கரம் இல்லாததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், 30 அடி துாரத்துக்கு இழுத்தபடி சென்றது. பின்னர், டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனாலும் பஸ்சின் சர்க்கரம் கழன்று ஓடிய சமப்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த, அரசு போக்குவரத்து சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் விசாரித்தார். விசாரணையில் அந்த பஸ்சுக்கு கடந்த மாதம், 9ம் தேதி வீல் சர்வீஸ் செய்யப்பட்டு, 23ல் குறிப்பிட்ட இடதுபுற வீலுக்கு பேரிங் மாற்றியது தெரியவந்தது.
அதேசமயம் வாராந்திர பராமரிப்பு பணி, சோதனை ஓட்டம் நடத்தவில்லை. இதனால் டயர் கழன்றது தெரியவந்தது. எனவே, பணியில் அலட்சியம் காட்டிய ராசிபுரம் கிளை மேலாளர், இளநிலை பொறியாளர் , போர்மேன் , தொழில்நுட்ப பணியாளர்கள் என 7 பேரையும் சஸ்பெண்ட் செய்து சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.