அமெரிக்க மாடல் எனக்கூறி டேட்டிங் ஆப்பில் 700 பெண்களை ஏமாற்றிய டெல்லி ஆசாமி கைது: அந்தரங்க படங்களை வைத்து மிரட்டி பணம் பறிப்பு

4 months ago 13

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் எச்ஆர் பிரிவில் பணியாற்றுபவர் துஷார் சிங் பிஷ்த் (23). பிபிஏ முடித்துள்ள இவருக்கு நல்ல வேலை இருந்தாலும், குறுக்கு வழியில் சம்பாதிக்க ஆசைப்பட்டார். இதனால், பம்பிள் எனும் டேட்டிங் ஆப்பில் அமெரிக்க மாடல் என போலி கணக்கை உருவாக்கி உள்ளார். இதன் மூலம், 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்களுடன் சேட் செய்து அவர்களை தனது வலையில் விழச் செய்துள்ளார். இவர் மீது நம்பிக்கை வந்ததும், பெண்களின் அந்தரங்க புகைப்படம், வீடியோக்களை கேட்டு பெற்றுள்ளார்.

பின்னர் அதை வைத்து மிரட்டி பணம் வாங்கி உள்ளார். இதே போல, கடந்த ஓராண்டாக இவரிடம் பழகி ஏமாந்த டெல்லி பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர் டெல்லி சைபர் கிரைம் போலீசில் கடந்த மாதம் 13ம் தேதி புகார் செய்தார். அதன் அடிப்படையில் கிழக்கு டெல்லியில் சாகர்பூர் பகுதியில் துஷார் சிங்கை போலீசார் கைது செய்தனர். அவர் சுமார் 700 பெண்களை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. இவரிடமிருந்து 13 கிரெடிட் கார்டுகள், சர்வதேச மொபைல் எண்ணுடன் கூடிய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post அமெரிக்க மாடல் எனக்கூறி டேட்டிங் ஆப்பில் 700 பெண்களை ஏமாற்றிய டெல்லி ஆசாமி கைது: அந்தரங்க படங்களை வைத்து மிரட்டி பணம் பறிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article