
புதுடெல்லி,
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், 4 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். அவரது மனைவியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான உஷா, 3 குழந்தைகள் ஆகியோருடன் வர உள்ளார். நாளை டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் தரை இறங்க உள்ளார். டெல்லியில் உள்ள அசர்தாம் கோயிலுக்குச் செல்ல உள்ளனர். மேலும் பாரம்பரிய இந்திய கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் வணிக வளாகத்திற்கும் செல்கிறார்கள்.
ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார். அப்போது இரு தலைவர்களும் வர்த்தகம், வரி உள்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 22-ந்தேதி ஜெய்ப்பூருக்கு செல்லும் ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் அங்கு அமர் கோட்டை உட்பட பல வரலாற்று தலங்களுக்கு சென்று பார்வையிடுகிறார்கள். 23-ந்தேதி ஆக்ராவுக்கு சென்று தாஜ்மகாலுக்கு செல்கிறார்கள். பின்னர் ஜெய்ப்பூருக்கு சென்று அங்கிருந்து 24-ந்தேதி அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.