பட்டம் அறிந்து பயிர் செய் என்பார்கள். அதாவது எந்தப் பட்டத்திற்கு என்ன வகையான பயிரை சாகுபடி செய்ய வேண்டுமோ அதனை உரிய பட்டத்தில் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த சாகுபடி சரியான முறையில் அமைந்து, மகசூலும் சிறப்பாக இருக்கும். ஆனால் சோயா மொச்சைக்கு இந்த பட்டம் கணக்கெல்லாம் தேவையில்லை. கோ 1 (இறவை), கோ 2, கோ 3 ஆகிய ரகங்களை எல்லா பட்டத்திலும் பயிரிடலாம். 90 நாட்களில் பலன் தரக்கூடிய இந்த சோயா மொச்சையை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் அனுகூலம் பெறலாம். சோயா மொச்சையை ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை), புரட்டாசிப் பட்டம் (செப்டம்பர்-அக்டோபர்), மாசிப்பட்டம் (பிப்ரவரி-மார்ச்) ஆகிய பட்டங்களில் சாகுபடி செய்யலாம். 90 நாட்களில் வளர்ந்து பயனளிக்கும் இந்தப் பயிரானது, 40 நாட்களில் 50 சதம் பூக்கும் திறன் கொண்டது. இதை முன்செய் நேர்த்தி முறையில் நிலத்தை நன்கு உழுத பின் பாத்தியாகவும், வாய்க்காலாகவும் பயிரிடலாம்.
கோ 1, கோ 3 ஆகிய ரகங்களை ஹெக்டேருக்கு 80 கிலோ வீதமும், கோ 2 – (மானாவாரி) ரகத்தை ஹெக்டேருக்கு 60 முதல் 70 கிலோ வீதமும், ஊடுபயிராக பயிரிட ஹெக்டேருக்கு 25 கிலோ விதையும் இருந்தாலே போதுமானது. விதையிலிருந்து பரவும் நோய்களான வேர் அழுகல் நோய், வாடல் நோய், இலைப்புள்ளி நோய், நுனிக்கருகல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதைக்கு கார்பென்டாசிம் 2 கிராம் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் 3 பாக்கெட் மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் உடன் கஞ்சி கலந்து விதைநேர்த்தி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். விதைநேர்த்தி செய்யாவிட்டால், 10 பாக்கெட் ரைசோபியம் மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா உடன் தொழுஉரம், உயிர் உரம், மணல் கலந்து விதைப்பதற்கு முன்னால் இடவேண்டும். பாக்டீரியாவால் விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடங்களுக்கு உலர்த்த வேண்டும்.
இந்த விதைகளை 2 அல்லது 3 செ.மீ. ஆழத்தில் 30-க்கு 10 செ.மீ. இடைவெளியில் ஊன்ற வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 20 கிலோ தழைச்சத்து, 80 கிலோ மணிச்சத்து 40 கிலோ சாம்பல் சத்து மற்றும் 40 கிலோ கந்தகச் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடி உரமாக இடவேண்டும். விதைத்த 40ம் நாளில் இலை மூலம் 2 சதவீதம் டிஏபி கரைசல் தெளிப்பதன் மூலமும், சாலிசிலிக் அமிலம் 100 பிபிஎம் என்ற அளவில் இலை மூலம் விதைத்த 30 மற்றும் 40ம் நாளில் தெளிப்பதன் மூலமும் அதிக மகசூல் பெறலாம்.விதைத்தவுடன் நீர்ப் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்று நாட்கள் கழித்து உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். பின்னர் மண் மற்றும் காலநிலைகளுக்குத் தகுந்தவாறு குளிர்காலத்தில் 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் கோடை காலத்தில் 7 முதல் 70 நாட்கள் இடைவெளியிலும் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.இந்த சோயா மொச்சைக்கு அதிகபடியான ஈரம் இருக்கக்கூடாது. அதனால் மண் காயக் காய நீர் பாய்ச்சினாலே போதுமானது. வறட்சியின் தாக்கத்தை சரிகட்ட கயோலின் 3 சதவீதக் கரைசல் அல்லது பாரபின் ஒரு சதவீதக் கரைசலை இலையின் மீது தெளிக்க வேண்டும்.
இறவைப் பயிருக்கு ஹெக்டேருக்கு பென்மித்திலின் 3.3 லிட்டர் அல்லது ஆலகுளோர் 4.0 லிட்டர் விதைத்தவுடன் தெளித்து நீர்ப் பாய்ச்ச வேண்டும். இதன் மூலம் விதைத்தலில் இருந்து 30 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்தலாம். விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் களைகளை ஒருமுறை எடுத்து நீர் பாய்ச்ச வேண்டும். களைக்கொல்லி தெளிக்கவில்லையெனில் விதைத்த 20 மற்றும் 35 நாட்களுக்குப் பின்னர் கைக்களை எடுக்க வேண்டும். முளைத்த பின் களைக்கொல்லியான இமாசிதிபரை விதைத்த 20 நாட்களில் தெளிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து 30ம் நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும்.இந்த மொச்சையைக் கரும்பில் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். சோயா மொச்சையைத் தனிப்பயிராகவும் சாகுபடி செய்யலாம். மேலும் இப்பயிரை வாழை, மரவள்ளி, பருத்தி, மஞ்சள், தென்னை ஆகிய பயிர்களிலும் ஊடுபயிராகப் பயிரிடலாம். இந்த முறையில் சோயா மொச்சையை சாகுபடி செய்தால் நல்ல முறையில் மகசூலை அள்ளலாம்.
The post அனைத்துப் பட்டத்திற்கும் ஏற்ற சோயா மொச்சை! appeared first on Dinakaran.