
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி (வயது 36). இவர் இந்திய அணிக்காக 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இந்திய அணிக்காக 82 சதங்களை அடித்து அசத்தி உள்ளார். சீனியர் வீரரான விராட் கடந்த டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். மேலும், ஐ.பி.எல். தொடரிலும் ஆடி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் இதுவரை 262 போட்டிகளில் 8447 ரன்கள் குவித்துள்ளார். விராட் கிரிக்கெட் ரசிகர்களால் 'கிங்'என செல்லமாக அழைக்கப்படுகிறார்.
உலக கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் ஒரே நேரத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய, விளையாடக்கூடிய பேட்ஸ்மேனாக இன்றைய தேதிக்கு விராட் கோலி மட்டுமே இருக்கிறார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஐ.சி.சி. தரவரிசையில் முதல் இடம் வகித்த ஒரே வீரர் என்ற சாதனையை விராட் கோலி தன்வசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் விராட் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நீங்கள் பேட்டிங் செய்வதற்கு கடினமான பந்துவீச்சாளர்கள் யார்? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த விராட், டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் என்றார்.
மேலும், ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கையின் லசித் மலிங்கா மற்றும் இங்கிலாந்தின் ஆதில் ரஷீத் இருவரையும் தான் விளையாட சிரமப்பட்டதாகவும், டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சுனில் நரைனை விளையாட சிரமப்பட்டதாகவும் விராட் கோலி கூறியுள்ளார்.