அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பேச்சு

6 hours ago 1

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு பகுதியில் உள்ள தனியார் மஹாலில் வைத்து நேற்று (15.5.2025) மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் அனைத்து சமுதாய நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது. இதில் வல்லநாடு, கீழவல்லநாடு, வடவல்லநாடு சென்னல்பட்டி, வசவப்பபுரம், பக்கப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அனைத்து சமுதாய இளைஞர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பேசியபோது, "உங்கள் கிராம பகுதியை சேர்ந்த குழந்தைகள் கல்வியை நன்றாக கற்றும், இளைஞர்கள் எவ்வித பிரச்சினையில் ஈடுபடாமலும், அரசு பணிகளிலும் மற்றும் இதர தனியார் நிறுவனங்களிலும் சேர உழைக்க வேண்டும்.

உங்கள் பகுதிகளில் எந்தவித ஜாதி சண்டைகளும் ஏற்படா வண்ணம் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கிராமத்தில் வசிப்பவர்களுக்கிடையே ஏற்படும் தங்களின் தனிப்பட்ட பிரச்சினையை பொது பிரச்சினையாக்காமல் காவல் நிலையத்தின் மூலம் சுமுகமாக தீர்ப்பதற்கு வழி காண வேண்டும்.

கிராம இளைஞர்கள் சாதி சமுதாய வேறுபாடின்றி அனைத்து சமுதாய மக்களுடன் ஒற்றுமையாக பழகி வழிகாட்ட வேண்டும். அந்நிய நபர்கள் யாரேனும் தங்கள் கிராம பகுதிகளில் சுற்றித் திரிந்தாலோ அல்லது அந்நிய நபர்களின் நடமாட்டம் இருப்பது தெரிந்தாலோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்தவித குற்றசம்பவம் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தங்கள் பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள், கிராம பகுதிகளில் சாதி சண்டைகள் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு, அதனால் சந்திக்கும் இழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதையும் அவர்களுக்கு எடுத்துக்கூறி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

கிராமங்களில் நடக்கும் திருவிழா நிகழ்ச்சிகளில் மற்ற சமுதாய மக்களை பாதிக்கும் வகையில் பாடல்கள், கொடிகள் மற்றும் சுவரொட்டி வாசகங்கள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கிராமத்தில் ஏதேனும் சிறு பிரச்சினைகள் ஏற்படும்போது சமுதாய மக்களை ஒன்று திரட்டி சாலை மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபடாமல் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உங்கள் பிரச்சினையை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் கிராமத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து (மதுபானம், கஞ்சா விற்பனை செய்பவர்கள்) காவல்துறைக்கு தகவல் தெரிவித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழி செய்ய வேண்டும். தகவல் தருபவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

கிராமத்தில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களும் சாதி மத சண்டைகள் இன்றி, சமுதாய ஏற்றத்தாழ்வுகள் இன்றியும், குற்றமில்லாத கிராமமாகவும் உங்கள் கிராமம் முன்னணி கிராமமாகவும் திகழ ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. சுதீர், முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்காதர் உட்பட காவல்துறையினர் மற்றும் அனைத்து கிராம இளைஞர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Read Entire Article