
கோவை,
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தி திவ்ய பிரியா(வயது 28) சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் கல்லார் பாலம் அருகே கார் விபத்துக்குள்ளானது. திவ்யப்பிரியா மதுரையில் பல் மருத்துவராக உள்ளார். இவர், அவரது கணவர் கார்த்திக் ராஜா, உறவினர்கள் வளர்மதி (48), பரமேஸ்வரி (44) உள்ளிட்டோருடன் நீலகிரிக்கு சுற்றுலா சென்றார். இன்று மாலை காரில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை சென்றுள்ளனர்.
பார்த்திபன் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார்.. மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு முதல் வளைவு அருகே வந்த போது, கார் பிரேக் பிடிக்காமல் மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில், திவ்யப்பிரியா, பரமேஸ்வரி ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வளர்மதி லேசான காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர்,
அவர்களை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திவ்யப்பிரியா, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். காயமடைந்த மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.