அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்த்த வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு

4 hours ago 1

சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது சம்பந்தமான மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

மேலும், வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தன. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கட்சி விதிகளில் திருத்தம், புதிய தலைமை தேர்வு உள்ளிட்ட உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை.

உரிமையியல் நீதிமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளன என்று வாதிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் விளக்கத்தைக் கேட்கும் வகையில் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார். ரவீந்திரநாத், புகழேந்தி, ராம்குமார் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பெயர் கொடி பயன்படுத்த தடை விதித்திருந்தாலும், தற்போது நிலைமை மாறி உள்ளது.

பெரும்பாலான உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். அதனால் இது சம்பந்தமாக விசாரணை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது என்று குறிப்பிட்டனர். இதையடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுக்கள் மீதான உத்தரவை பிப்ரவரி 12ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது.

The post அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்த்த வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article