அதானி மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை பாஜக, பாமக ஆதரிக்கத் தயாரா? : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

2 months ago 8

சென்னை: அதானி விவகாரத்தில் முதலமைச்சர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை எனக் கூறி சட்டப்பேரவையில் இருந்து பாமக வெளிநடப்பு செய்தது. அதானி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எந்த தொடர்புமில்லை என பதில் அளித்திருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் அதானி குழும முதலீடு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “சபை உறுப்பினர் ஜிகே மணி (பாமக) இந்த அவையில் மட்டுமல்ல.. அவரது கட்சித் தலைவர்களும் அவரது கட்சியினரும் தொடர்ந்து இதுபற்றி வெளியில் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வெளியில் பேசுகிற அனைத்தையும் இந்த அவையில் அவர் பதிவு செயய்வில்லை.

அதானியோடு முதலமைச்சருக்கு தொடர்பிருக்கிறது; அதானியை முதலமைச்சர் சந்தித்து பேசியிருக்கிறார் எனவும் பேசியிருக்கிறார்கள்; அதையும் இங்கே பேசுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் என்ன காரணத்தினாலோ அதை பேசவில்லை. ஒருவேளை உண்மை தெரிந்துவிட்டது என்ற காரணத்தால் அதை பேசாமல் விட்டுவிட்டார் என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் அதானி குழுமத்தின் தொழில் முதலீடுகள் குறித்து, பொதுவெளியில் வரும் தவறான தகவல்களுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்திருக்கிறார். அதன் பிறகும் இதுபற்றி பேசப்பட்டு வருகிறது.

அதானி குழுமத்தின் முதலீடுகளை வைத்து தமிழ்நாடு அரசுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசுகிறவர்களுக்கு நான் எழுப்பக் கூடிய கேள்வி என்னவெனில், அதானி மீது சொல்லப்பட்டிருக்கக் கூடிய குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும்; அந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் முழக்கம் எழுப்பி வருகின்றன. திமுக மீது குறை சொல்லிக் கொன்டிருக்கக் கூடிய பாஜகவோ, பாமகவோ இந்த கோரிக்கையை ஆதரிக்க தயாராக இருக்கிறதா? இது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கிப் பேச நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

இப்போதும் சொல்கிறோம்.. அதானி விவகாரத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை வந்து அவர் சந்திக்கவும் இல்லை; நானும் அவரைப் பார்க்கவும் இல்லை. இதைவிட வேறு விளக்கம் வேண்டுமா? நான் கேட்கிற கேள்வி, அதானி விவகாரம் குறித்து பாஜக ஆட்சியைப் பார்த்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களே.. இது குறித்து பேச தயாராக இருக்கிறீர்களா? என்பதுதான் என் கேள்வி. இவ்வாறு பேசினார்.

The post அதானி மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை பாஜக, பாமக ஆதரிக்கத் தயாரா? : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article