
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், பேராசிரியர்கள் இல்லாத பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள், பணியாளர்கள் இல்லாத அரசு அலுவலகங்கள் என்ற வரிசையில் ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையங்கள் தற்போது தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.
ஏழையெளிய குழந்தைகளிடையே ஊட்டச்சத்தினை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூலம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 50 மாத கால தி.மு.க. ஆட்சியில், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததோடு, ஐநூறுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களுக்கு மூடுவிழா நடத்தியுள்ளது திராவிட மாடல் தி.மு.க. அரசு. "ஆக்குவது கடினம். அழிப்பது சுலபம்" என்று சொல்வார்கள். இந்த வகையில் அழிக்கும் பணியினை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் விளைவாக, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவதிலும் சுகாதாரத்தை கற்பிப்பதிலும், எண்கள், எழுத்துகள், வண்ணங்கள் ஆகியவற்றை போதிப்பதிலும்; கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய்வதிலும் மிகப் பெரிய அளவில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அங்கன்வாடி மையங்களில் முப்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படாததே காரணம். காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அங்கன்வாடியில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அங்கன்வாடி மையங்களில் நிலவும் அவல நிலையைச் சுட்டிக்காட்டி நானும் ஏற்கெனவே அறிக்கை விடுத்திருந்தேன். ஆனால், தி.மு.க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக, அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை எப்படி குறைக்கலாம் என்ற சிந்தனையில் தி.மு.க. அரசு இருக்கிறது. தற்போது, அங்கன்வாடி மையங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகளை அனுப்பவே பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையும், காலிப் பணியிடங்களை நிரப்புவதில் பெருத்த காலதாமதத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கையும் கடும் கண்டனத்திற்குரியது.
முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், மூடப்பட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.