சென்னை: தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழாய்வில், ‘தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆதாரங்களை வெளியிட்டு ஆதாரப்பூர்வமாக அறிவித்தார். 5300 ஆண்டுகளுக்கு முன்பே ’உருக்கு இரும்பு தொழில்நுட்பம்’ தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது. இப்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு.4000ம் ஆண்டின் முதற்பகுதிக்கு கொண்டு சென்றிருக்கிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு அறிமுகம் ஆகியிருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம். இதை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன் என்றும் முதல்வர் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில், தொல்லியல் துறை சார்பில் ‘இரும்பின் தொன்மை’ என்ற நூலினை வெளியிட்டார்.
அந்த விழா மேடையிலேயே, கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி, கீழடி இணைதளத்தினை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ‘கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி நமது தமிழ்க்குடி’ என்று பெருமை பொங்க நாம் சொன்னபோது வெற்றுப் பெருமை பேசுகிறார்கள் என்று சிலர் விமர்சித்தார்கள். அதற்கு காரணம், தமிழ் சமுதாயத்தில் வந்து புகுந்த இழிவுகளும் – அதனால் ஏற்பட்ட தேக்க நிலையும்தான் காரணம். இந்த இடைக்கால இழிவுகள் நீங்க காலம்தோறும் எண்ணற்ற புரட்சியாளர்கள் தோன்றினார்கள்.
வள்ளுவர், வள்ளலார் தொடங்கி அயோத்திதாச பண்டிதர் என அந்த பட்டியல் நீளமானது. அவர்களின் தொடர்ச்சியாகத்தான், பகுத்தறிவையும் இனமான உணர்வையும் ஊட்டினார் பெரியார். பண்பாட்டு ரீதியாக அடிமைப்படுத்தப்பட்டு கிடந்த நமது தமிழினத்தை, ‘ஏ தாழ்ந்த தமிழகமே’ என்று அண்ணா தன்னுடைய சிந்தனையாலும், நா நயத்தாலும் தட்டியெழுப்பினார். சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட நம்முடைய வாழ்வியலை திராவிட இயக்க மேடைகள்தோறும் எடுத்துச் சொன்னோம். இலக்கியங்கள் படைத்தோம்.
தலைவர் கலைஞர் ‘இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும், இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும், அதுவும் மானம் மானம் என்றே முழங்கும்!’ என்று சங்கத்தமிழை சாறெடுத்து, நம்முடைய வரலாற்றை எடுத்துச் சொன்னார். இந்த விழாவின் மூலம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக நேற்று முன்தினம் சொல்லியிருந்தேன். பலரும் என்ன அறிவிப்பு என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வருகின்ற வரையில் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். தமிழர்களின் தொன்மையை உலகத்திற்கே சொல்லும் ஒரு மாபெரும் ஆய்வு பிரகடனத்தை இப்போது நான் அறிவிக்கப் போகிறேன். தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது.
இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல. உலகிற்கே மீண்டும் சொல்கிறேன். தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வு பிரகடனத்தை இந்த நிகழ்ச்சி வாயிலாக அறிவிக்கிறேன்.
5300 ஆண்டுகளுக்கு முன்பே ’உருக்கு இரும்பு தொழில்நுட்பம்’ தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது. இப்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு.4000ம் ஆண்டின் முதற்பகுதிக்கு கொண்டு சென்றிருக்கிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு அறிமுகம் ஆகியிருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம். இதை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உலகத்தின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. புனே நகரில் இருக்கும் பீர்பால் சகானி தொல் அறிவியல் நிறுவனம், அகமதாபாத் நகரில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகிய தேசிய அளவில் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களுக்கும், பன்னாட்டு அளவில் உயரிய நிறுவனமான அமெரிக்க நாட்டின் புளோரிடா மாநிலத்தில் இருக்கும் பீட்டா ஆய்வகத்துக்கும் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தேசிய நிறுவனங்களில் OSL பகுப்பாய்வுக்கும், பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க காலப் பகுப்பாய்வுக்கும் ஒரே தாழியில் இருந்து மாதிரிகளை அனுப்பி வைத்தோம். இப்படியான 3 நிறுவனங்களிடம் இருந்தும் ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பல்வேறு ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரிகளை அனுப்பி பெறப்பட்ட முடிவுகளை, கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைக்கிறது. இப்போது கிடைத்திருக்கும் கதிரியக்க காலக்கணக்கீடுகள் மற்றும் OSL பகுப்பாய்வு காலக்கணக்கீடுகள் அடிப்படையில் கி.மு. 3345-லேயே, தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகிவிட்டது என்று தெரிய வருகிறது.
அதற்கான ஆய்வு முடிவுகள் இதோ: இந்த பகுப்பாய்வு முடிவுகள், வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் இருக்கும் தொல்லியல் அறிஞர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் இரும்பின் தோற்றத்தையும் பண்டைய தொழில்நுட்பத்தை பற்றியும் ஆய்வு செய்துவரும் அறிஞர்கள். அந்த அறிஞர்கள் எல்லோரும் இந்த அவையில் கூடியிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒருசேர தமிழ்நாடு அரசையும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் ஆய்வு முன்னெடுப்புகளையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள். இரும்பின் காலம் குறித்த முடிவுகளுக்கு ஆதரவாகவும் – கண்டுபிடிப்புகளை பாராட்டியும் இருக்கிறார்கள். இதுபோன்று பகுப்பாய்வு முடிவுகள் ஆய்வாளர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்திருக்கிறது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தகைசால் பேராசிரியர் ’பத்ம திலீப் குமார் சக்கரவர்த்தி’யும், ஒன்றிய அரசின் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் ’முனைவர் ராகேஷ் திவாரி’ உள்பட எல்லா அறிஞர்களும் பகுப்பாய்வு முடிவுகளை பாராட்டி தங்களின் கருத்துகளை சொல்கிறார்கள். இவை எல்லாவற்றையும் தொகுத்துதான் ‘இரும்பின் தொன்மை’ என்ற நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. தேசிய அளவில் தொல்லியலில் வல்லுநராக இருக்கும் ஆய்வாளர்களிடம் பகுப்பாய்வு முடிவுகள் பற்றி கருத்து பெறப்பட்டு, அந்த அறிஞர்களின் கருத்துகளும் இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது.
அகழாய்வு செய்யப்பட்ட இடங்களில் இருக்கும் இரும்பு பொருட்களின் உலோகவியல் பகுப்பாய்வும், இரும்புத்தாது இருக்கும் தொல்லியல் தளங்களில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அகழாய்வுகளும் இந்த கண்டுபிடிப்புகளுக்கு மேலும் வலுசேர்க்கும்; சான்றுகளை வழங்கி தெளிவுபெற வைக்கும். அப்படியான வலுவான சான்றுகளுக்காக நம்பிக்கையோடு நாம் காத்திருப்போம். இருந்தாலும், அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்பு தாதுவில் இருந்து, இரும்பை பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று பெருமிதத்தோடு கூறுவோம்.
அதாவது, 5300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியிருக்கிறோம் என்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் உலகுக்கு நான் அறிவிக்கிறேன். இது தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ் நிலத்துக்கும் பெருமை. உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே இதை நாம் கம்பீரமாக சொல்லலாம். இந்த பெருமையை நம்முடைய குழந்தைகளிடம் நாம் எடுத்துச் சொல்லவேண்டும். இப்படிப்பட்ட பெருமைமிக்க தமிழ்ச்சமூகம், உலகுக்கே வழிகாட்டும் அறிவார்ந்த சமூகமாக வளரவேண்டும் என்று எதிர்காலத்துக்கான திசையை காட்டவேண்டும். பழம்பெருமையை பேசுவது என்பது புது சாதனைகள் படைக்க ஊக்கமாக அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ராஜேந்திரன், தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கல்வியியல் மற்றும் ஆய்வு ஆலோசகர் கா.ராஜன், இந்திய தொல்லியல் துறை முன்னாள் தலைமை இயக்குநர் ராகேஷ் திவாரி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் திலீப் குமார் சக்கரவர்த்தி, தமிழக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தர மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* 5300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியிருக்கிறோம். இது தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ் நிலத்துக்கும் பெருமை.
* தேசிய நிறுவனங்களில் OSL பகுப்பாய்வுக்கும், பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க காலப் பகுப்பாய்வுக்கும் ஒரே தாழியில் இருந்து மாதிரிகளை அனுப்பி வைத்தோம். அனுப்பி பெறப்பட்ட முடிவுகளை, கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைத்திருக்கிறது.
* தமிழனின் பெருமையை உலகம் அங்கீகரித்துள்ளது
இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன். தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வுகள், பல்வேறு திருப்புமுனைகளை உருவாக்கி வருகிறது. இத்தகைய முடிவுகள் தமிழ்நாட்டு வரலாற்றுக்கு மட்டுமல்லாமல், இந்திய துணைக்கண்ட வரலாற்றுக்கே முக்கிய திருப்புமுனையாக திகழ்ந்து வருகிறது. இதுபோன்ற ஆய்வுகளை தொல்லியல் துறை தொடர்ந்து செய்யவேண்டும் என்று துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆணையரையும் கேட்டுக் கொள்கிறேன். தமிழ், தமிழ் நிலம், தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லி வந்ததெல்லாம் இலக்கிய புனைவுகள் அல்ல; அரசியலுக்காக சொன்னவை அல்ல; எல்லாம் வரலாற்று ஆதாரங்கள். உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. தமிழினின் பெருமையை தமிழினத்தின் தொன்மையை உலகம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதை சொல்லும் வரலாற்று பெருமைமிக்க இந்த விழா, நாம் வாழும் காலத்தில், நான் ஆளும் காலத்தில் நடைபெறுவது என் வாழ்நாளில் கிடைத்திருக்கக் கூடிய பெருமை! பெருமையிலும் பெருமை! என்று முதல்வர் கூறினார்.
* முதல்வருக்கு ஆயிரம் நன்றிகள்-அமைச்சர் ரகுபதி பதிவு
சட்டத் துறை அமைச்சர் ரகுபதி நேற்று வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவு: 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நிலத்தில் அறிமுகம் ஆகிவிட்டது என்ற வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு முடிவுகளை முதல்வர் உறுதி செய்துள்ளார். தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டு வரலாற்றையும் மறைக்க துடித்து பொய் வரலாறு புனைந்து வந்தோரின் பொய்களை எல்லாம் அறிவியல் ஆய்வு மூலம் சுக்கு நூறாக்கிவிட்டார் நமது முதல்வர். இந்திய வரலாறு தெற்கில் தமிழ் நிலத்தில் இருந்தே இனி எழுதப்படும், அதை உலகிற்கு உணர்த்திய முதல்வருக்கு ஆயிரம் நன்றிகள்.
The post 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்து இரும்பு காலம் துவங்கியது: தொல்லியல் துறை கண்டுபிடிப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.