சென்னை: சென்னை வேளச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு மருத்துவர்கள் பணிநியமனத்திற்காக ஜனவரி 5ம் தேதி தேர்வுகள் நடைபெற்றது. 2,553 மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு, சுமார் 24,000 மருத்துவர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். தற்போது கூடுதலாக 89 காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 2642 மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கான மதிப்பெண் பட்டியல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் 4585 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்புகள் நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புகள் முடிந்தவுடன் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி, தரவரிசைப் பட்டியல் வழங்கப்படவுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் சாதிவாரி இடஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. ஆகவே பணிநியமனம் செய்யப்பட உள்ள மருத்துவர்களுக்கு வரும் 20ம் தேதிக்குப் பிறகு கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. முதல் முறையாக பணிநியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு அவரவர் விரும்பும் இடங்களுக்கே கலந்தாய்வு மூலம் பணிநியமனம் செய்யப்பட்டு விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் பணிநியமன ஆணைகள் வழங்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
The post 2642 டாக்டர் பணியிடங்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.