நாகை: நாகை மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி அட்டூழியம் செய்து வருகின்றனர். தங்கள் எல்லைக்கு வந்து மீன்பிடிப்பதாக கூறி, மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும், அதேபோல இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களிடம் இருக்கக்கூடிய மீன்பிடி தளவாடங்களை பொருட்களை பிடிங்கி செல்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதனைத் தடுக்குமாறு ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசும், மீனவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 5 மீனவர்களும், சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 5 மீனவர்களும் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து மீன்பிடி வலைகள், தளவாட பொருட்கள் மற்றும் பிடித்த மீன்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இதையடுத்து கரை திரும்பிய மீனவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post நாகை மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி அட்டூழியம்..!! appeared first on Dinakaran.