சென்னை: வக்ஃபு சொத்துகளை பதிவு செய்ய ஒன்றிய அரசு இணையதளம் உருவாக்கியது சட்டவிரோதம் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 தொடர்பான வழக்கு தற்பொழுது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. முஸ்லிம் அமைப்புகள் மட்டுமின்றி சமூக நல்லிணக்கத்தை விரும்பும் அனைத்துக் கட்சிகளும் வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துள்ளன.
இந்த நிலையில் ஒன்றிய அரசு “வக்ஃப் உமித் வலைவாசல்”-ஐ ஜூன் 6ம் தேதி தொடங்கி, வக்ஃப் சொத்துக்களின் பதிவைக் கட்டாயமாக்கி வருகிறது. இந்த நடவடிக்கை முழுமையாகச் சட்டவிரோதமானதுமாகும்; மேலும், இது நேரடியாக நீதிமன்ற அவமதிப்பாகும். அரசியல் சாசனத்திற்கு முரணானதாக உள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வக்ஃப் நிர்வாகிகளும், மாநில வக் ஃப் வாரியங்களும் இந்த வக்ஃப் உமித் வலைவாசல் வழியாக வக் ஃப் சொத்துக்களைப் பதிவு செய்வதை நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை தவிர்க்குமாறு அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வழிகாட்டலைப் பின்பற்றுமாறு வக்ஃப் நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post வக்ஃபு சொத்துகளை பதிவு செய்ய ஒன்றிய அரசு இணையதளம் உருவாக்கியது சட்டவிரோதம்: ஜவாஹிருல்லா கண்டனம் appeared first on Dinakaran.