
தஞ்சை,
தஞ்சை மாவட்டம் மெடிக்கல் காலேஜ் ரோடு, ராஜப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மகன் வசந்த் (வயது 26). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி விட்டது. இவருடைய உறவினர்கள் ஈரோட்டில் உள்ளனர். இதனால் உறவினர்களை பார்க்க ஈரோட்டுக்கு வசந்த் வந்தபோது அவருக்கு இங்கு கூலி வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வாறு வேலை செய்து வந்த அவருக்கும் ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. மேலும் திருமண ஆசை காட்டி அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் சிறுமியை ஈரோட்டில் இருந்து கடத்திச்சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். இந்தநிலையில் சிறுமியுடன் தஞ்சையில் வசந்த் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தஞ்சைக்கு போலீசார் சென்று வசந்தை பிடித்ததுடன், அங்கிருந்த சிறுமியை மீட்டு ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை வசந்த் 2-வது திருமணம் செய்யும் எண்ணத்தில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வசந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.