
புதுடெல்லி,
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தால் நாட்டில் அசாதாரணமான சூழல் நிலவியது. இதனால், 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வாரம் நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர்.
இன்னும் 12 லீக் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 4 பிளே-ஆப் சுற்று என மொத்தம் 16 ஆட்டங்களை நடத்த வேண்டி உள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன. இதன் காரணமாக ஐ.பி.எல். போட்டியை மீண்டும் தொடங்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.
இதையொட்டி ஐ.பி.எல். நிர்வாக குழு உறுப்பினர்களும், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் நேற்று ஆலோசனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் வரும் 17-ம் தேதி முதல் மீண்டும் ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்படி மே 17 ஆம் தேதி தொடங்கி ஜூன் 3 ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 17 போட்டிகள் 6 மைதானங்களில் நடைபெறுகிறது. திருத்தப்பட்ட அட்டவணையில் இரு அணிகள் மோதும்இரண்டு (மதியம், இரவு) போட்டிகள் அடங்கும், அவை இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். பிளேஆப்கள் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளன:
தகுதிச் சுற்று போட்டி 1 - மே 29ம் தேதி
எலிமினேட்டர் - மே 30ம் தேதி
தகுதிச் சுற்று போட்டி 2 - ஜூன் 1ம் தேதி
இறுதிப் போட்டி - ஜூன் 3ம் தேதி
பிளேஆப் போட்டிகளுக்கான மைதான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.